சென்னை: அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம் என நெல்லை பொருநை விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழக அரசு சார்பில் நெல்லையில் இரண்டு நாள்கள் பொருநை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவினை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தாமிரபரணியின் பழங்காலத்து பெயர் பொருநை என்று செல்கிறார்கள். இலக்கியவாதிகள் கற்பனை திறன் கொண்டவர்கள். திருநெல்வேலி வட்டாரம் என்று வரும் போது, இங்கு இருக்கின்ற எதார்த்தத்தை மீறாமல், அதனை உள்ளடக்கி இலக்கியத்தை தரக்கூடியவர்கள். அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 37 ஆயிரத்து 588 பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் இருக்ககூடிய தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 6 பேரில் ஒருவர் பள்ளி மாணவர்களாக இருக்கின்றனர். ஒருகாலத்தில் வறுமையின் அடையாளமாக தெரிந்த அரசு பள்ளிகள் தற்போது பெருமையின் அடையாளமாக திகழ்கிறது.

இவ்வாறு கூறினார்.