சென்னை: தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகளை  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், ஆண்டுதோறும் பெரியார், அம்பேத்கர் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து,  2021 ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது” க.திருநாவுக்கரசுவுக்கும், “டாக்டர் அம்பேத்கர் விருது” சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே .சந்துருவுக்கும் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் , சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை”, வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது” திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதே போன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது ” வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டிற்கான ” டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது ” சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் தகே.சந்துரு அவர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இவ்விருதாளர்களுக்கு விருதுத் வழங்கப்பட்டு வரும் ஒரு இலட்சம் ரூபாய் என்பதை இவ்வாண்டு முதல் ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்திட முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் இவ்விருதுகள் , விருதுத் தொகையுடன் , தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படும்.

வருகிற 15-1-2022 சனிக்கிழமை, திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்குவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.