சென்னை

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க அனைவரையும் அனுமதிக்க  வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.  அதன்பிறகு கொரோனா பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.  தளர்வுகள் மேலும் மேலும் அதிகரிக்க அதிகரிக்க அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி அளித்த போதிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே வாசன், “கொரோனா தொற்றின் காரணமாகப் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வரும் இவ்வேளையில் தற்போது பல்வேறு தளர்வுகளுக்கு இடையில் சாலைப் போக்குவரத்து முழு அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை புறநகர் போக்குவரத்து மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு அனுமதிக்கப்படவில்லை.

தற்போது அத்தியாவசியப் பணிகளுக்கும், அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர் அட்டை வைத்து இருப்பவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். புறநகரில் இருந்து சென்னையில் பணிபுரியும் 90%  பேர் புறநகர் ரயிலில்தான் இதற்கு முன்னர் பயணித்தனர்.

ஆனால், தற்போதுள்ள கட்டுப்பாடுகளால் பேருந்துகளில் பயணம் செய்து குறித்த நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்ல முடியாத சங்கடமான நிலை இருக்கிறது. இதனால் நேரமும் பணமும் அதிக அளவில் விரயமாகிறது.

இந்தச் சூழ்நிலையில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இவர்கள் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகவே, மாணவர்கள், தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் நலன் கருதி, அரசு, ரயில்வே நிர்வாகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி அமைத்து கரோனா கட்டுப்பாடுகளுடன் அனைவரும் பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அதிக புறநகர் ரயில்களையும் இயக்க வேண்டும். அதற்கு மாநில அரசு மத்திய அரசுடன் பேசி உடனடித் தீர்வு காண வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன்”.எனத் தெரிவித்துள்ளார்.