டெல்லி: மூளை அறுவை சிகிக்சை செய்து கொண்ட  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

கொரோனா உறுதியான பின்பு டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி உடனடியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்காக்கும் சுவாச கருவிகள் உதவியுடன் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அறிந்த குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் ராணுவ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

முன்னதாக நேற்று பிரணாப்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா பரிசோதனை செய்தேன். அதன் முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது, எனவே என்னை தொடர்பு கொண்டவர்கள் கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருந்தது, குறிப்பிடத்தக்கது.