சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 156 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

ஜெ.மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோரிக்கை வைத்து இருதார். இது தொடர்பாக ஆணையத்திடமும் புகழேந்தி மனுவில், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்ட, அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். சிகிச்சையிலும், அவரது மரணத்திலும் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்க அஇஅதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இன்று காலை 10:30 மணிக்கு அஇஅதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

இதுவரை 156 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில் விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.