ஆஸ்திரியா நாட்டின் உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது அடிபட்டு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த எதிரணி வீரருக்கு உதவிய ஜார்ஜிய கால்பந்து வீரர் லூகா லோச்சோஷ்விலி-க்கு நேர்மையாக விளையாடியதற்காக FIFA Fair Play விருது வழங்கப்பட்டது.

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி ஆஸ்திரியாவின் ஒல்ப்ஸ்பெர்கர் அணிக்கும் வெய்ன் அணிக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது வெய்ன் அணியின் வீரர் ஜார்க் தேகி தலையில் ஒல்ப்ஸ்பெர்கர் அணியைச் சேர்ந்த கால்பந்து வீரரின் முட்டி மோதியதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதனை கவனிக்காமல் சிறிது நேரம் ஆட்டம் தொடர்ந்த நிலையில் ஜார்க் தேகி நினைவற்று கிடப்பதையும் அவருக்கு வலிப்பு போன்று ஏற்படுவதையும் சற்று தொலைவில் இருந்து கவனித்த ஒல்ப்ஸ்பெர்கர் அணிக்காக விளையாடிய லூகா லோச்சோஷ்விலி வேகமாக அவர் அருகில் ஓடி வந்து முதலுதவி செய்தார்.

மயங்கி விழுந்த ஜார்க் தேகியின் தலை தொங்கி நாக்கு வறண்டு உள்ளே இழுத்துக் கொண்டு போவதை உணர்ந்த லூகா தனது கையால் நாக்கை வெளியில் இழுத்து நிறுத்தினார்.

உடனடியாக மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் வந்ததை அடுத்து அவருக்கு அடுத்தகட்ட முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு மண்டை எலும்பு முறிவு மற்றும் கன்னங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

Georg Teigl

இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் காப்பாற்றப்பட்டார்.

அனுபவம் வாய்ந்த திறமையான மருத்துவர்களால் கூட இவ்வளவு துரிதமாக சாதுர்யமாக செயல்பட முடியாது என்று இந்த சம்பவம் குறித்து கால்பந்து ரசிகர்கள் அதிகம் வாழும் ஆஸ்திரிய நாட்டில் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

Luka Lochoshvili

இந்த நிலையில் நேர்மையாக விளையாடிய லூகா எதிரணி வீரரின் உயிரை காப்பாற்றியதற்காக அவருக்கு தற்போது ஃபிபா ஃபேர் பிளே விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜயார்ஜியா-வைச் சேர்ந்த கால்பந்து வீரர் லூகா லோச்சோஷ்விலி தற்போது கிராமோன்ஸ் என்ற இத்தாலிய கால்பந்து அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.