சென்னை

சென்னையில் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரில் தினசரி சுமார் 5ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றில் சுமார் 2,500 டன் குப்பை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.   இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் கொட்டப்பட்ட குப்பைகளால் அங்குக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.   நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு இந்த கிடங்கின் கிழக்குப் பகுதியில் குப்பைகளில் தீப்பற்றத் தொடங்கியது.

அங்குள்ள குப்பைகளில் மளமளவென தீ பரவி அவற்றிலிருந்து அடர் புகை வெளியேறியது. அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசியதால், கிடங்கின் கிழக்கு பகுதியை நோக்கிப் புகை பரவி அங்குள்ள குடியிருப்புகளில் வசிப்போர் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர்.  தீ விபத்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தீயணைப்புத் துறை மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்குத் தகவல் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இ ங்கு 4 தீயணைப்பு லாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  சென்னை மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி, தீப்பற்றி எரியும் பகுதியில் குப்பைகளைக் கலைத்து விடுதல், அவற்றின் மீது மண்ணைக் கொட்டுதல்போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும் 15-க்கும் மேற்பட்ட நடைகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தீயை அணைக்க தேவையான நீர், தீயணைப்பு லாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 3 துறைகள் சார்பில் தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.