புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும், கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ் ( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று (ஜனவரி10). 

கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார்.

தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார்.

திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டு க்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார்.

சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்ப துக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்து உள்ளார். அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்குபவர் கே.ஜே. யேசுதாஸ்.

கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார்.

முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.

மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.

இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1965-ல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரஷ்ய அரசு இவரை அழைத்திருந்தது.

இன்டர்நேஷனல் பார்லிமன்ட் ஃபார் சேஃப்டி அன்ட் பீஸ் அமைப்பின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971-ல், இந்திய-பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றபோது, கேரளா முழுவதும் தன் இசைக் கச்சேரிகள் நடத்தி பிரதம மந்திரி யுத்த நிதிக்காக பணம் திரட்டினார்.

கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.

ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என் அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர், குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம் அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல் திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும் தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை தொடங்கி நடத்திவருகிறார்.

இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும் பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தியவர்.