சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, அங்கு அனல்பறக்கும் பிசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் உள்பட கூட்டணி கட்சியினர் அங்கு முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதுபோல அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆளும் கூட்டணி மீது புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் பல மனுக்கள் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்பதும் தெரிய வந்ததாகக் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 8 ஆயிரத்து 500 வாக்குகள் தான் என்பதால், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களில் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர், பணபட்டுவாடா பற்றி நிர்வாகிகளிடம் பேசியுள்ளதால், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரியும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால் மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல தேதிகளில் மனு அளித்திருந்ததாகக் கூறியுள்ளார்.