சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க ஓபிஎஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

வரும் 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொது குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கொரோனாவ காரணம் காட்டி, பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தால், காணொளி காட்சி வாயிலாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய பொதுக்குழுவில்,  கழக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து செய்து , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுப்பது சம்பந்தமாகவும் , இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில்  பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழுவில் கட்சியின் கணக்கு வழக்குகளை பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் சமர்பிக்க வேண்டும் என்பதால், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து பொருளாளர் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட பொதுக்குழு அழைப்பிதழ் தேனி பெரியக்குளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டாதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ்  15 நாட்களுக்கு முன்னதாகவே அனுப்பப்பட்டிருக்க வேண்டும், ஆனால், தற்போதுதான் அனுப்பப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில்  வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பதில் அளித்துள்ளனர்.