ரேலி

மொபைலில் பேசியபடி ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற மணமகன் ரெயில் மோதி மரணம் அடைந்தார்.

மொபைலில் பேசியபடி அல்லது குறுந்தகவல்களை படித்தபடி சாலையைக் கடப்பதும்,  ரெயில்வே தண்டவாளத்தை கடப்பதும் அபாயமான செயல்.   இது குறித்து பல விளம்பரங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன.   எனினும் பலர் இதை பார்த்தும் அதற்கு மாறாகவே நடந்துக் கொள்கின்றனர்.   இது போல ஒரு செய்கையால் நேற்று இரவு மணம் புரிந்துக் கொள்ள வேண்டிய மணமகன் நேற்று காலையில் உயிர் இழந்துள்ளார்.

பரெலி மாவட்டத்தின் அருகில் உள்ள நந்தோசி என்னும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் 30 வயதான நரேஷ் பால்.   இவர் நொய்டாவில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டிட பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.   இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உமா கங்க்வார் என்னும் பெண்ணும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று இரவு திருமணம் நடக்க இருந்தது.   அதற்காக அவர் வீட்டார்  திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவருக்கு அவருடன் பணிபுரிபவரிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்துள்ளது.    அவர் தனது வீட்டில் அருகிலுள்ள ரெயில்வே லைனில் நடந்தபடி பேசிக் கொண்டு இருந்துள்ளார்.    அவரிடம் இரு மொபைல்கள் இருந்தன.   மற்றொரு மொபைலில் வந்துள்ள குறுஞ்செய்தியை படித்தபடியே பேசிக் கொண்டுள்ளார்.    அப்போது ராஜ்யா ராணி எக்ஸ்பிரஸ் என்னும் விரைவு ரெயில் வண்டி அந்த தடத்தில் வந்துள்ளது.

நரேஷ் தொலைபேசியிலும் குறும் தகவலிலும் மும்முரமாக இருந்ததால் ரெயில் வந்ததையும் அது ஒலி எழுப்பியதையும் கவனிக்கவில்லை.   அதனால் ரெயில் அவர் மீது மோதி அங்கேயே அவர் உடல் நசுங்கி மரணம் அடைந்தார்.   இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

நரேஷின் உறவினரும் நெருங்கிய நண்பருமான அனில், “நான்  என் பால்ய நண்பனின் திருமணத்தில் கலந்துக் கொள்ள நந்தோசி கிராமத்துக்கு வந்தேன்.   ஆனால் தற்போது அவரது இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளப் போகிறேன்.    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவருக்கு உமாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.   அது முதல் அவர் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார்.  அந்தப் பெண்ணை எப்படி தேற்றுவது என எங்களுக்கு தெரியவில்லை”  என கவலையுடன் தெரிவித்தார்.