சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட  அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அங்கீரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையால் ஏற்பட்ட பிரச்சினை, அதைத்தொடர்ந்து தொடரப்பட்ட வழக்குகள், அதன் தீர்ப்புகள் காரணமாக, ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு இந்திய தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் என பல இடங்களில் மனு கொடுத்துள்ளது.

ஓபிஎஸ் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டதுடன், 3 வாரத்திற்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் நடைமுறை தொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆகஸ்டு 1ந்தேதி  அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுறை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால், இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியையே அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், கட்சியின் நிர்வாகியாகவும்  அங்கீகரித்துள்ளது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே வங்கிகள், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து, எடப்பாடியை அங்கீகரித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையும் எடப்பாடியே அதிமுகவின் நிர்வாகி என்பதை உறுதி செய்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 1ந்தேதி ஆலோசனை…