சென்னை: குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்விதான் ஏணிப்படி என சென்னை நடைபெற்ற  மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

சென்னை கடற்கரையில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளியில் இன்று  பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘நம் பள்ளி நம் பெருமை’ என பிரசார வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  திருட முடியாத ஒரு சொத்து கல்வி மட்டும்தான் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  “குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்விதான் ஏணிப்படி  என்பதை உணர்ந்திருக்கும் அரசாங்கம் என்பதால் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக இந்த நாளில் உறுதி ஏற்போம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.