சென்னை,

நேற்று சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்டு அரசு பேருந்தை, வலது கை உடைந்து கட்டுப்போட்ட நிலையில், இடது கையால் இயக்கிய டிரைவரால், அதில் பயணம் செய்த பயணிகள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் பரிதவிப்புடன் பயணம் செய்தனர்.

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட் உள்ளனர்.

நேற்று இரவு  வழக்கம்போல் சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனரின் வலது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அவர், தனது இடது கை மூலமே பஸ்ஸை இயக்கி வந்தார். கியர் போடும்போது ஸ்டிரியங்கை பிடித்திருக்கும் கையை எடுத்துவிட்டு, ஒற்றை கையாலேயே  பஸ்ஸை இயக்கி வந்தால், அதனுள் அமர்ந்திருந்த பயணிகள் பதற்றமடைந்தனர்.

இதையடுத்து பேருந்து விழுப்புரம் அருகே வந்தபோது, அவருடன் பயணிகளில் சிலர் வாக்குவாதம் செய்து, அவர் பேருந்து ஓட்டுவதை மொபைல் போனில் வீடியோ எடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரைவர், பஸ்சினுள் விளக்கை அனைத்துவிட்டு,  பேருந்து புறவழிச்சாலை வழியாக இயக்காமல் மாற்றுபாதையில் இயக்கி வந்தார்.

இதன் காரணமாக பஸ் பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கி வந்ததால், பயணிகள் பெரும் பதற்றம் அடைந்தனர். பஸ்சை எங்காவது கொண்டு மோதி விடுவாரோ என்ற பயத்திலேயே பரிதவிப்போடு பயணம் செய்து சென்னை வந்தனர்.

இதுகுறித்து,  ஒற்றைக்கையுடன் பேருந்தை இயக்கி  பஸ் டிரைவர் கூறும்போது,  தான் இரண்டு கைகளாலேயே பேருந்தை  ஓட்டியதாகவும், வலது கையில் தற்போது வலி கிடையாது என்றும் கூறி உள்ளார்.

ஆனால், அவருக்கு விடுமுறை கொடுக்காமல், அவரை வேலை செய்ய வைத்த   சேலம் கோட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும், ஒற்றை  கையுடன் சேலத்தில் இருந்து சென்னை வரை சுமார் 8 மணி நேரம் பஸ்சை  இயக்கி பொதுமக்களின் வாழ்வோடு விளையாடியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

பயணிகளின் உயிரோடு விளையாடிய அரசு போக்குவரத்து துறை  அதிகாரிகள் மற்றும் டிரைவர் மீது தகுந்த நடவடிக்கையை உடனே அரசு  எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.