சென்னை: செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு  எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற லிங்கை தொட்டால் உங்கள் பணம் கொள்ளைபோய்விடும் என அறிவுறுத்தி உள்ளார்.

டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக டிஜிட்டர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இணையதளம், மற்றும் ஆப்கள் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதுடன், சைபர் கிரைமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருந்தாலும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,   கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே’  மூலம் மோசடி அரங்கேறி வருகிறது.  அததை தடுக்க காவல்துறை டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். நவீன டிஜிட்டல் உலகில் டீக்கடை முதல் அனைத்து கடைகளிலும் கூகுள் பே இணையதள பண பரிமாற்றம் அதிகரித்து உள்ளது. சாதாரண பூ விற்கும் பெண்கூட கூகுள் பே, பேடிஎம் போன்ற நவீன வசதிகளை கையாண்டு கேஷ்லெஸ் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமகா சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில்,   கூகுள் பே என்று அழைக்கப்படும் `ஜி பே’ மூலமாக பணம் அனுப்புவது தொடர்பாக புதிய கிரைம் அரங்கேறி வருகிறது.

இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ள  டி.ஜி.பி. சைலேந்திரபாபு,  ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி வருகிறேன். உங்கள் வங்கி கணக்கையோ, ரகசிய குறியீட்டு எண்ணையோ வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள். இதனை பலமுறை பொது மக்களிடம் எடுத்துக் கூறி உள்ளோம். ஆனால் வங்கி விவரங்களை கொடுத்து பொதுமக்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கிறார்கள்.

தற்போது கூகுள் பே மூலம் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஏமாற்றி பொதுமக்களின் வங்கி கணக்கை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம்.

இந்த விஷயத்தில் நீங்கள் உஷாராக இல்லை என்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும்.

தமிழக காவல் துறையில் உள்ள `காவல் உதவி செயலி மற்றும் 1930 எனும் அவசர உதவி எண் ஆகியவற்றின் மூலமாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் செய்தால் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கி கணக்குக்கு பணம் சென்ற 24 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும். எனவே அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி தொடர்பான தகவலை கேட்டால் இணைப்பை துண்டித்து விடுங்கள்.

`கூகுள் பே’யில் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று யாராவது போனில் தெரிவித்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி விவரத்தை தெரிவியுங்கள்.

சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தெரியாமல் பணத்தை அனுப்பி இருந்தால் நிச்சயம் நேரில் வருவார். அப்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். இதுபோன்று உஷாராக செயல்பட்டு பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.