சென்னை,

ல்லிக்கட்டு போராட்டம் திசை திரும்புகிறது. என்மீது சாயங்களை பூச வேண்டாம் என  ஹிப் ஹாப் ஆதி தெரிவித்து உள்ளார்.

போராட்டம் திசை திரும்புவதால் உண்மையான நோக்கத்துடன் களம் இறங்கியவர்கள் வேதனை அடைகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியூசிக் டைரக்டர்  ஹிப் ஹாப் ஆதியும் தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

கோவையில் நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்களுடன் கலந்துகொண்டு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார்.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஒருசில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளால், போராட்டம் திசை திரும்பி போவதாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தையும், கோவையில் நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்வதாகவும்,  போராட்டத்தை கலைக்க சில தீய விஷமிகள் முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும்,  தேச தலைவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது நல்ல நோக்கமாகாது, தேச விரோத செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என பேஸ்புக்கில் ஹிப் ஹாப் ஆதி பேசியுள்ளார்.

தனித் தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு என போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று நமது நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றும், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன்,  ஜல்லிக்கட்டுக்கு நல்ல தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு நான் எப்போதும் குரல் கொடுப்பேன். மேலும் என் மீது வேறு சாயங்களை பூசவேண்டாம்,  போராட்டத்தில் ஈடுபட்ட எனக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை  என்றும் அவர் கூறியுள்ளார்.