சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு  அவரது நினைவிடத்திற்கு திமுகவினர் பேரணியாக செல்வது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரிடத்தில் பகுத்தறிவு என்ற அறிவு ஊட்டசக்தி பெற்று. அறிஞர் அண்ணாவிடம் அரசியல் அறிவு – தெளிவு கற்று. தலைவர் கலைஞரிடம் அரசியலில் போர் குணத்தையும் பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியலையும், அனுகுமுறையையும் கற்று, வெற்றி பல குவித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

மறக்கமுடியாத நாள்! அன்றுதானே, நம் உயிர் நம்மைவிட்டு பிரிவதுபோல கலைஞர் நம்மைவிட்டு பிரிந்துபோன நாள்! 4 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் ஆனால், நான்கு நிமிட நேரமாவது அவர் நம் நெஞ்சைவிட்டு அகன்றிருப்பாரா?

அறிஞர் அண்ணா “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஒரு சிறு அமைப்பாக உருவாக்கி, அதை பெரும் அமைப்பாக உயர்த்தி விட்டுப்போனார். கலைஞர் அந்த அமைப்பை வலிவும் பொலிவும் உள்ளதாக்கினார். பெயருக்கு மாநில கட்சி ஆனால், அகில இந்திய அரசியலுக்கு ஆலோசனைக் கூறும் கட்சியாக்கி தியாகவேள்வியில் குதிக்கச்செய்து இந்தக்கழகத்தை கார் உள்ளளவும்; கடல் உள்ளளவும்; நிலைப் பெற்றிருக்க செய்தவர் கலைஞர் கருணாநிதி என குறிப்பிட்டுள்ளார்.

தான் தொட்ட பணி துலங்கவும்; தான் விட்ட பணிகளை தொடரவும்; கோடிக்கணக்கான கழகத்தோழர்களை வழிநடத்தவும்; தளபதி என்ற ஒரு தலைவரையும் தந்தவர் “அவர் துயில்கொள்ளும் இடம் நோக்கி பேரணியாக செல்வோம் வாரீர்!” என்று அழைப்பு விட்டிருக்கிறார் நம் முதலமைச்சர் என தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று சென்னையில் எட்டுதிக்கிலும் உள்ள கழகத் தோழர்கள் அணி அணியாக திரண்டு வாருங்கள். கலைஞர் சிலையிலிருந்து புறப்பட்டு, வழியில் அண்ணாவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, கலைஞர் துயில்கொள்ளும் இடம் வரை போவோம் என்றும், கலைஞர் துயில்கின்ற இடம் நாம் தொழுகின்ற இடம் அல்லவா!

இவ்வாறு  துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.