சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர்.

திமுகவில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. அதற்கு ஒருவரை தேர்வு செய்ய கட்சி பொதுக்குழு வரும் 9ம் தேதி கூடுகிறது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் மட்டுமன்றி,  பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதையடுத்து, இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் பலர் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இந் நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மனு தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இருவரும் தங்களது மனுக்களை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.