சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டில் அதிமுக அரசின் மீது திட்டமிட்டு திமுக பழி சுமத்துகிறது என்று கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கின் விசாரணையின்போது  மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து மற்ற வகுப்பினர் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் விசாரணையில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து வன்னியர் இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அங்கும் தோல்வியையே சந்தித்தது. இந்த விவகாரத்தில், அதிமுக, திமுக என இரு கட்சிகளும், ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இன்று சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் இந்த சட்டத்தை முறையாக நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.  இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில்,  “கவன ஈர்ப்பு தீர்மானத் தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கும்போது, முந்தைய அதிமுக ஆட்சியில், அவசரமாக இந்த 10.5 சதவீத இடஒதுக்கீடை கொண்டு வந்து முறையாக அந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை என்று ஒரு தவறான செய்தியை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார். இது தவறான தகவல்.

அதிமுகவைப் பொருத்தவரைக்கும் எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும், அவர்களது மறைவுக்குப் பின்னரும் அதனைத் தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு 26.2.2021 அன்று சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திமுக அரசு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. குறிப்பாக அம்பா சங்கர் ஆணையத்தின் அறிக்கை தொடர்பான தகவல் எதையுமே உயர் நீதிமன்றம் கிளையில் தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், அதிமுக அரசு சாதி வாரியாக கணக்கெடுப்பு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி , 6 மாத காலத்திற்குள் இந்த ஆணையம் தமிழ்நாடு முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுத்து அதை அறிக்கையாக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.  ஆனால், ஆட்சி வந்த ஆணையத்தின் காலத்தை நீட்டிக்கவில்லை. அந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர்கள் சரியான முறையில் வாதாட வில்லை, சரியான தரவுகளை சமர்ப்பிக்கவில்லை. அதனாலேயே நீதி மன்றம் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வழங்கியது. பின்னர், மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் திமுக அரசுதானே மேல்முறையீடு செய்தது. அங்கு நடைபெற்ற விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டதாக முதல்வர் கூறுகிறார். அப்படி என்றால், மதுரை உயர் நீதிமன்ற கிளையில்  வழக்கு நடைபெற்றபோது, ஏன் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை, முழுமையான ஆதாரங்களை ஏன் சமர்பிக்கவில்லை. முழுமையான தரவுகளை ஏன் கொடுக்கவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார்.

திமுக அரசின் திறமையின்மை காரணமாகவும், தேவையான ஆதாரங்களை எடுத்து வைத்து வாதாடததாலுமே, உயர்நீதிமன்றம், வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதையெல்லாம்  திமுக அரசு மறைத்துவிட்டு, வேண்டுமென்றே, அதிமுக அரசுமீது  திட்டமிட்டு பழிசுமத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.