தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரி அம்மன் “ஸ்ரீ பகவதி அம்மன்” “துர்கா தேவி” எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன், கன்னிப்பெண் வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்விடம் கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமமான, இந்தியாவின் தென்கோடி நில முனையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளையும், சடங்குகளையும் “திரு. சங்கராச்சாரியார்” சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது.ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.

நாகர்கோவிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 90 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 240 கிமீ தொலைவிலும் கன்னியாகுமரி அமைந்துள்ளது.

கன்னியாகுமரி தொடருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில், மதுரை, திருநெல்வேலி, சென்னை, புதுச்சேரி, திருவனந்தபுரம், கொல்லம், புனலூர், புதுதில்லி, கொல்கத்தா, திப்ருகர் போன்ற நகரங்களுக்கு- தொடருந்து சேவைகள் உள்ளது.

வரலாறு.

வேதகாலம் துவங்கியது முதல் தேவி வழிபாடு நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடுபற்றி கூறப்பட்டுள்ளது[6]. 1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு+ இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதில் சுவாமி பிரமானந்தா (1863-1922) (Brahmananda), நிர்மலானந்தா (1963-1938) (Nirmalananda) ஆகியோர் இக்காலகட்டங்களில் தேவிக்குப் பணிவிடை செய்துள்ளனர். பின்னர் 1935-35ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து தேவிக்குப் பூசை செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு வந்த பெண்களில் ஏழு பெண்கள் குழு மூலம் 1948ல் சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. கேரளாவில் பாலக்காடு, ஒட்டப்பாளையம் என்ற இடங்களிலும் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. எழுத்தாளர் பெரிபிளசு (கி.பி. 60-80) (Periplus) தேவி கன்னியாகுமரி அம்மன் பற்றியும், பிரம்மச்சர்யம் பற்றியும், அன்னையின் வழிபாடு பற்றியும் குறிப்பிடுகிறார். இந்தவூர் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் பரவ வம்ச அரசர்களின் ஆட்சியில், திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் இந்தியச் சமஸ்தானத்துடன் இணைந்தது.

புராணங்களில் இப்பகுதியை பாணாசூரன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவன் தவமிருந்து பிரம்மாவிடம் “தனக்கு மரணம் என்று ஒன்று நிகழ்ந்தால் இவ்வுலகத்தில் ஒரு கன்னிப் பெண்ணின் கையால் மட்டுமே மரணம் நேர வேண்டும்” என வரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்வம் கொண்டு இந்திரனை அவனின் சிம்மாசனத்திலிருந்து அகற்றியதாகவும், பின்னர் அங்கிருந்த தேவர்களை விரட்டியதாகவும், இந்திரன் இல்லாமல் பஞ்சபூதங்களைச் சமன்படுத்த முடியாமல் பூலோகம் தடுமாறியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது தேவர்களின் வேண்டுதலால் பகவதி அம்மன் இவ்வூரில் சிறு பெண்ணாகப் பிறந்ததாகவும், பகவதி அம்மனை மணமுடிக்கச் சிவன் ஆசை கொண்டதாகவும், ஆகையால் சிவன் காலை முகூர்த்தத்திற்காக சுதந்திரத்திலிருந்து புறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிவன் அம்மனை மணந்துகொண்டால் “பாணாசூரன்” வதம் நடக்காது என உணர்ந்து கொண்ட நாரதர் சேவல் வடிவங்கொண்டு கூவியதாகவும், சூரியன் உதயமானதால், நல்ல நேரம் முடிந்துவிட்டதாக நினைத்து சிவபெருமான் சுசீந்திரம் இருந்துவிட்டதாகவும், பின் கன்னி தேவி பாணாசூரனை அழித்தார்.