சென்னை:
140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயலை சென்னை விமானநிலைய புதிய டெர்மினல் எதிர்கொண்டது அதன் தரத்திற்கு கிடைத்த சான்று என ஆணையம் பெருமிதம் கொண்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டெர்மினலில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி, மேற்கூரை போன்றவை இது வரை 70க்கும் மேற்பட்ட முறை உடைந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பயணிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி சென்னையை வர்தா புயல் கடுமையாக தாக்கியது. 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் சென்னை நகரத்தில் உள்ள பல கட்டடங்களுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது. ஆனால் சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு அதன் உறுதி தன்மை தான் காரணம் என விமான நிலைய ஆணையம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
ஐஐடி வல்லுனர்களின் வழிகாட்டுதல் படி தான் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மேற்கூரை உள்ளிட்ட பல விஷயங்கள் மிகவும் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் கண்ணாடிகள் சில சமயங்களில் உடைந்து விழுவதற்கு, தரமற்ற கண்ணாடி என்றோ, அமைத்த பணியாளர்களையோ குறை சொல்வது சரியல்ல.
அடிக்கடி உடைந்து விழுவது குறித்து சென்னை ஐஐடி வல்லுனர்கள் ஆய்வு செய்ததில் கண்ணாடியின் தரம், தூண்கள், அமைத்த முறை போன்றவற்றில் எவ்வித குறையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ரசாயன முறிவு காரணமாக தான் கண்ணாடிகள் உடைந்து விழுகின்றன. அதுவும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடிகள் விழாது. தூள் தூளாக தான் விழும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.