சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கியது.

2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சியினர்மீது தொடரப்பட் அனைத்து அவதூறு வழக்குகளும் கைவிடப்படுவதாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பதிவான அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்துசெய்ய  தமிழ்கஅரசு உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சியின்போது, கடந்த 10 ஆண்டுகளில் விஜயகாந்த், பிரேமலதா, ஈவிகேஸ் இளங்கோவன், நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, விஜயதரணி, ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.எம்.நாசர், கனிமொழி, தயாநிதி மாறன், அறப்போர் ஜெயராமன், கணேசன், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், பத்திரிகையாளர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல வழக்குகள் நீதிமன்ற அனுமதியுடன் வாபஸ் பெறப்பட்டன.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.