மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதால் மும்பை நகர் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார்.  நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது, அவருடன் சென்ற பாதுகாவலரிடம் மர்மநபர் ஒருவர் கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுத் தலைமறைவானார்.

அவர் அக்கடிதத்தை சலீம்கானிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் படித்த போது அதில் அவருக்கும் நடிகர் சல்மான்கானிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனா; இருவரும் கடிதத்துடன் பாந்திரா காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்தனர். காவல்துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை மிரட்டல் தொடர்பாக நடிகர் சல்மான் கான் வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  சல்மான்கான் ஐஐஎஃப்ஏ நிகழ்ச்சிக்காக அபுதாபி சென்றிருந்து நேற்று தான் மும்பை திரும்பினார்.  இந்நிலையில் அவருக்குக் கொலை மிரட்டல் கடிதம் வந்தது மும்பை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.