சென்னை:

செனனை விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில், (கொரோனா வைரஸ்) கோவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க தேவையான வசதிகளை முழு வீச்சில் செய்து வருகிறோம் என்றார்.

தமிழகத்தில் இதுவரை 300 படுகை கொண்ட தனிப்படுத்தும் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த படுகை அறைகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கபடும் என்றும் அவர் தெரிவித்தார். இது தனிபடுத்துதல் வார்டுகளை சென்னை மற்றும் மதுரையில் திறக்க தேவையான நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கியுள்ளர். இந்த வார்டுகளில் கோவிட் 19 பாதிப்புக்குள்ளானவர்களுகான சோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த சிகிச்சை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைகளை தொய்வின்றி அளிக்க தேவையான ஏற்பாடுகள நாங்கள் செய்து வருகிறோம்.

தமிழகத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்களைத் தொடர்ந்து ரயில் நிலையங்களிலும் கரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 52 பேரின் ரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டதில் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் கொரோனாவின்  தாக்கம் குறையும் என்பது பற்றி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வெப்பநிலை அதிகமாக இருந்தால் கொரோனா குறையும் என்றால் வட மாநிலங்களில் பரவியிருக்காதே.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற சந்தேகத்தில் 1,654 பேரை கண்காணித்து அனுப்பினோம். காற்றிலே பரவக்கூடிய கொரோனா வைரசை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது; அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். கரோனாவை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், எம்.என்.சிக்கள், தியேட்டர்கள், திருமண அரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் கொரோனா வைரச் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து கலெக்டர்களுக்கும், தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கை கழுவுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நோய் 20% நேரடியாக இருமல் அல்லது தும்மினால் காற்றில் நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. அதே நேரத்தில் 80% பரவுதல் பாதிக்கப்பட்டவர்களின் தொடுவதன் மூலம் ஏற்படுகிறது.

தமிழக எல்லை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி கட்டுப்பாட்டு அறை மற்றும் சுகாதார ஹெல்ப்லைன் 104 மூலம், கோவிட் 19 பாதிப்பு குறித்து இதுவரை 100 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அனைத்து விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நடத்தப்பட்டு வரும் சோதனைகளை தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் மறறும் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோரும் ஆய்வு செய்தார்.