டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 91.68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்றும், ஒரே நாளில் 8.55 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று, இந்தியாவையும் சீர்குலைத்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82.29 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 75.44 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது தொற்று பரவல்  படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 11 கோடியை தாண்டி உள்ளது.  இதுவரை 11,07,43,103 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும்,  கடந்த 24 மணி நேரத்தில்  8,55,800 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,29,313 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 496 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,22,607 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.49 சதவீதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 53,285 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  75,44,798 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடையும் விகிதம் 91.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதியதாக  நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின்   எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,61,908 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.