சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆவடியில் செயல்பட்டு வரும் காவல்துறை அதிவிரைவு படை தலைமை அதிகாரி ஒருவர் புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை (ppe-kit)  வடிவமைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோன கவச உடையுடன் ஆவடி அதிவிரைவு படை தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ்

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவிலும், இதுவரை 1லட்சத்து 33 ஆயிரத்து 738 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் கொரோனா நோயாளிகளுக்க சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தொற்று  பாதிப்பு ஏற்படாமல் இருக்க ‘பிபிஇ கிட்’ எனப்படும் பிளாஸ்டிக்கால் பூசப்பட்ட கவச உடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உடையில், காற்று புகவாய்ப்பில்லாததால், வியர்வை அதிகமாக சுரப்பதாகவும்,  அதை அணிபவர்களின்,  உடலில் வெப்பம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதனால், பல்வேறு துறையினர், மாற்று கவச உடை தயாரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வளாகத்தில் உள்ள அதிவிரைவு படையின் 97-வது படைப்பிரிவின் தலைமை அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கவச உடையை வடிவமைத்துள்ளார்.

இந்த உடையை காவல்துறையினருக்F அணிவித்து, அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த பிபிஇ-கிட்டானது,  எம்.பி.எஸ்., (Microbial prevention suit) எனப்படும் நுண்ணுயிரிகளை தடுக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், எந்தவிதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி,  நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கவச உடையில், உயர் வெப்பத்தின்போது கூட திரவம் மற்றும் நுண்ணுயிரிகள் உட்புக முடியாது. உள்ளே நுழையும் படியும், உடல் வெப்பமாகாமல் இருக்கும் படியும் மேலாடை, கீழாடை, காலுறை என 3 பகுதிகளாக  இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  சாதாரண ஆடையை அணிந்திருப்பதை போன்ற உணர்வை அளிக்கும் இந்த உடையை அணிந்துகொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.

இந்த கவச உடையை கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளிஆராய்ச்சிகழகம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை உள்ளிட்டவை ஆய்வுசெய்து, மிகவும் பாதுகாப்பான ஆடை என சான்றளித்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.