திருவனந்தபுரம்: அமைச்சர் பதவியை நேற்று தூக்கி எறிந்த சஜி செரியன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா அமைச்சரவையில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியன். இவர் சமீபத்தில் அரசியல் சாசனத்துக்கு எதிராக சர்ச்சைக் குரிய கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வந்தது.

இந்த நிலையில், அவர் நேற்று தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்தார்.

இந்த நிலையில், அவர் மீது தேசிய மரியாதை அவமதிப்பு சட்டத்தின் கீழ் கேரள காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர்மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசி செரியன் பேசியது என்ன?

பத்தனம்திட்டாவின் மல்லப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சஜி செரியன், “இந்தியாவில் அழகான அரசியலமைப்பு உள்ளது என்று நாம் அனைவரும் கூறுகிறோம். ஆனால் நான் அதனை மக்கள் கொள்ளையடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றே கூறுவேன். அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டு இந்தியர்களால் எழுதப்பட்டது. இந்தியாவைக் கொள்ளையடிக்க அது அனுமதிக்கிறது. மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் என்ற வார்த்தைகள் பெயருக்காக எங்கோ ஒரு மூலையில் எழுதப்பட்டுள்ளன” என்று பேசினார்.

இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  “சாஜி செரியன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படித்தாரா? அரசியல் சட்டத்தின் தூய்மையும் மகத்துவமும் அவருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்,   மேலும், இந்தியாவின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைச்சரின் பேச்சுக்கள் இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் போராட்டங்களை அறிவித்தது.

எதிர்ப்பை அடுத்து அமைச்சரின் பேச்சுத் தொடர்பான வீடியோவை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேட்டுள்ளதாகவும், அவரின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானது என கண்டறியப்பட்டால், குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து சாஜி செரியனை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார். இந்தச் சந்திப்பை தொடர்ந்து தனது பதவியை நேற்று ராஜினாமா  செய்தார். இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.