புதுச்சேரி: புதுச்சேரியில்  மாநில அரசு அறிவித்துள்ளபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி நேற்று (25-01-23)  மாலை தொடங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சர் என்ஆர்.ரங்கசாமிம்,  ஆளுநர் தமிழிசையும் இணைந்து பயனர்களுக்கான   திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் என்ஆர். ரங்கசாமி,  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்ததிட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, இந்த  புதிய திட்டம் நேற்று மாலை தொடங்கி வைக்கப்பட்டு, பயனர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

முன்னதாக வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தலைவிகளுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக,  புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி,  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 21 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சுமார் 71 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது. இதற்காக அரசு முதற்கட்டமாக மாதம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்ருது,  குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று மாலை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.  முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக மாதிரி காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய  ஆளுநர் தமிழிசை, “பெண்கள் கையில் பணம் இருந்தால் அது சுயநலத்திற்காக அல்லாமல் குடும்பத்திற்காகதான் இருக்கும் என்பதை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது என்ற பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. இது கடந்த 1½ ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட கணக்காகும். இதன் மூலம் புதுச்சேரி முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். தாய்மார்களுக்கு உதவித் தொகை கொடுக்கும் முதல் அரசாக இந்த அரசு திகழ்கிறது. இந்த அரசு பெண்களுக்கு மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு பெரிய பரிசு கிடைத்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதுதான். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களது பெயரில் சொத்து பதிவு செய்தால் முத்திரைதாள் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கினோம். இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் அரசுக்கு வருமானம் குறைவு தான். இருந்தாலும் பெண்களுக்கு பெரிய பாதுகாப்பு கிடைத்துள்ளது. தற்போது பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் எதை செய்யலாம் என நினைத்தோம். 55 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கு குறைவான வயதுடைய பெண்களுக்கு அரசின் உதவி ஏதாவது கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1,000 வழங்க முடிவு செய்யப்படடது.

இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய போது 13 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறினார்கள். எனவே மாதம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தோம். தற்போது 71 ஆயிரம் குடும்பத்தினர் இருப்பதாக தெரிவித்தனர். சரியாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கும் வரை முதல் கட்டமாக 50 ஆயிரம் குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

கணக்கெடுப்பு சரியாக நடத்தி முடித்த பின்னர் தகுதி உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.  எங்கள் அரசு பொறுப்பேற்கும் போது முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரமாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மீதம் உள்ள 16 ஆயிரம் பேருக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.