சென்னை: தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற  விழாவில் காணொளி காட்சி மூலம் 20 கல்லூரிகளையும் திறந்துவைத்தார்.

2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் தொடர்ந்து, உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ரூ. 152.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள்,
தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோன்று, 2022-23ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,திருச்சிராப்பள்ளி மாவட்டம் – செஞ்சி;கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்டம் – மணப்பாறை;விழுப்புரம்-தளி;புதுக்கோட்டை மாவட்டம் – திருமயம்;ஈரோடு மாவட்டம் – அந்தியூர்;கரூர் மாவட்டம் – அரவக்குறிச்சி;தஞ்சாவூர் மாவட்டம் – திருக்காட்டுப்பள்ளி;திண்டுக்கல் மாவட்டம் – ரெட்டியார்சத்திரம்;கடலூர் மாவட்டம் – வடலூர்;காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,கடந்த 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.7.2022) தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தொடங்கி வைத்துள்ளார்.

மேலும்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 152 கோடியே 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் ஆய்வகங்கள்,தொழில் முனைவோர் மையங்கள்,விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.