சென்னை: தமிழ்நாட்டில், செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பதவி ஏற்றதும், பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்போது,   புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினா. அந்த   கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை  செயலாளர் முருகானந்தம், தொழில்துறை சிறப்பு  செயலாளர் லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை  இயக்குநர் நிர்மல் ராஜ், தமிழ்நாடு மேக்னசைட்  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கதிவரன், தமிழ்நாடு கனிம  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, அவர்களிடம் செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கனிம நிறுவன அதிகாரிகளிம் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி . செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதை இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், எம்.சாண்ட் உற்பத்தி மற்றும் அரவை மணல்  செய்வதற்கான தனிப்பட்ட குவாரி குத்தகைகள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செயற்கை மணல் கொள்கை

கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீப காலமாக எம்.சேண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற எம்.சேண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கண்காணித்திடவும் எம்.சேண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் கொள்கை ஒன்று தேவைப்படுகிறது.

தலைமுறைகளுக்கிடையேயான சமபங்கு கொள்கையினை உலக அளவில் ஏற்றுக் கொள்ளும் சூழலில் ஆறுகள், காடுகள், கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை மனித இனத்தின் ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறைகளின் நலனுக்காக பாதுகாக்க வேண்டி செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை 2023 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இன்றைய தேதியிலிருந்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வருகிறது.

செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையின் முக்கிய பொருண்மைகள்

அதிகமான அளவு மணல் எடுத்தல் மற்றும் இயற்கைத் வளங்களின் குறைபாடு ஆகியவற்றால் ஆற்றுமணலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய சுற்றுச்சூழல்/நில பயன்பாட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல்/அரவை மணல் உற்பத்தியை அதிகரிக்க கருதுகிறது. மேலும், செயற்கை மணல் / அரவை மணல் குவாரிச் செயல்பாட்டின் போது பயன்பாட்டிற்கு உதவாத கற்களிலிருந்தும் சிறிய அளவிலான கிரானைட் கற்களிலிருந்தும் தயாரிக்கப்படுவதால் குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவினை குறைப்பதற்கு பயன்படுகிறது.

கிரானைட் மற்றும் சாதாரணக்கல் குவாரிகளில் (Rough stone quarries) கிடைக்கும் சிறிய அளவிலான கற்கள் செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் குவாரி கழிவுகளே இல்லாத நிலையினை உருவாக்குவதே இக்கொள்கையின் குறிக்கோளாகும். மதிப்பு குறைந்த பயன்படாத பாறைக்கற்கள் / கழிவுகளிலிருந்து, செயற்கை மணல்/அரவை மணல் போன்ற உயர் மதிப்புப் பொருள் உருவாக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிக விலையுள்ள ஆற்று மணலுடன் ஒப்பிடும் போது பொதுமக்கள் செலவு குறைந்த தரமான கட்டுமானப் பொருளை பெறலாம்.

உற்பத்திக்கான தரம் முறையாக பயன்படும்பொழுது செயற்கை மணல் / அரவை மணல் அதிக நெகிழ்வுத்தன்மையும், உறுதித்தன்மை, எடை மற்றும் குறைந்த ஊடுருவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. இந்த நன்மைகள் காரணமாக செயற்கை மணல்/ அரவை மணல் தற்போது கட்டுமானத் துறையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இக்கொள்கையின் சிறப்பம்சங்கள்:-

ஆற்று மணலைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுத்தல், இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (BIS) பரிந்துரைக்கப்பட்ட தரத்தையொட்டி அதிக வலிமை மற்றும் செலவு குறைந்த, ஆற்று மணலுக்கு மாற்று கட்டுமானப் பொருளாக, தரமான செயற்கை மணல்/ அரவை மணலின் பயன்பாட்டை ஊக்குவித்தல், தமிழ்நாட்டில் உள்ள செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை முறையாக பின்பற்றச் செய்தல், செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகளின் ஒப்புதலுக்கான நடைமுறையை முறைப்படுத்துதல், கல் குவாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் மண் அரைக்கும்/உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவதற்கு வழி வகை செய்தல்;

கட்டடங்கள்/கான்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் குவாரி கழிவுகள் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை நேர்த்தியான முறையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல், மாநிலத்தில் கழிவு அற்ற (Zero Waste) சுரங்கம்/குவாரிகளை ஊக்குவித்தல், இக்கொள்கையின்படி செயற்கை மணல் / அரவை மணல் (M-Sand / Crushed Sand) உற்பத்தி செய்வதற்காக தனிப்பட்ட குவாரி குத்தகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.