சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம், கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் இருக்க கூடிய புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புனரமைக்கப்பட்டு கட்டிடத்தின் மதிப்பு ரூ.24 கோடியே 92 லட்சம் ஆகும். அதேபோல ரூ.1.13கோடி செலவில் இந்த வளாகத்தில் அமைக்கபட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த இடம் குடிநீர் வளங்கள் துறையின் தலைமை அலுவலகமாக செயல்பட உள்ளது. இதன் மூலம் சென்னை நகரின் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்று வாரியத்தின் பணிகளை நேரடியாக கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் செயல்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் வாரியத்தின் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் திட்டத்தில் ஏற்கனவே ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய புகார்கள், லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட கூடிய குடிநீர் பணிகள் உள்ளிட்டவை இந்த கட்டுப்பாட்டு மையத்தின் வாயிலாக கண்காணிப்பு செய்வதற்கான பணிகளும், கூடுதலாக செம்பரம்பாக்கம், புழல் ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த கட்டுப்பாடு மையத்தின் மூலமாக நடைபெறும். இதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம், கண்காணிப்பு பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.