பெரம்பலூர்:  4800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரம்பலூர்  மாவட்டத்தின் முதல் தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று காலை,   திருச்சி அருகே  காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததுடன், அதற்கான வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து,  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்கா துவக்க விழாவில் கலந்துகொண்டார். அப்போது, 10 நிறுவனங்கள் முதல்வர் முன்னணிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

மொத்தமாக 250 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமையவுள்ளது. மொத்தமாக 740 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 4,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவுட் தெரிவிக்கப்பட்டுள்ளது.