கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் முன்னதாக, பிச்சாவரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை தீட்சிதர்கள் அபகரித்துவிட்டனர். அதனால் சிதம்பரம் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என பிச்சாவரம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சூரப்ப சோழகனார் என்பவர் அறநிலையத்துறை அதிகாரி களிடம் மனு கொடுத்துள்ளார்.

சிதம்பரம் கோவில் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து, கோவிலை அரசு கையக்கப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பிச்சாவரத்தை சேர்ந்த சோழ மன்னர் வம்சாவழி ஜமீன் பாளையக்காரர் ராஜா சூரப்ப சோழகனார் என்பவர் கோவிலை அரசு கையக்கப்படுத்த வேண்டும் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சிதம்பரம் நடராஜர் கோவில் இரணியவர்ம சோழனால் தோற்றுவிக்கப்பட்டு சோழவம்ச மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழர்கள் பொற்கூரை வேய்ந்து ஆன்மிகம் வளர்த்தனர். அவர்கள் வழிவந்த சோழ வாரிசுகளே பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள். சிதம்பரம் நடராஜர் கோவில்  பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

ஆனால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களிடம் இருந்து தீட்சிதர்களால் அபகரிக்கப்பட்டது. இருந்தாலும், நடராஜர் கோவில் பஞ்சாட்சரபடியில் அமர வைத்து பட்டாபிஷேகமும், முடிசூட்டு விழாவும் சோழ மன்னர் பரம்பரையினரான எங்களுக்கு செய்யப்படுவது வழக்கத்திலும், நடைமுறையிலும் இருந்து வருகிறது.  இந்த ஆதாரமே கோவில் எங்களுடையது என்பது  போதுமானது.

தீட்சிதர்களுக்கு  கோவிலில் உரிமை உள்ளதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. தீட்சிதர்கள் கோவிலை சரியாக பராமரிக்கவில்லை. கோவிலின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். கணக்குகளை முறையாக கையாளவில்லை. ஆகவே தமிழக அரசு தனி அவசர சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.