சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக 7 சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளில்,  நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம் வசதிகள் என அனைத்தும் இடம்பெற்றிருக்கும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை மாநகரில் 186 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலைகளை பயன்படுத்துவதாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில்  103 கி.மீ நீளம் கொண்ட 7 சாலைகள் சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில்  ‘ஸ்மார்ட் நகர்ப்புற சாலை’களாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,  கிராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் (ஜிடபிள்யூடி) சாலை, கிராண்ட் நார்தர்ன் ட்ரங்க் (ஜிஎன்டி) சாலை, உள்வட்ட சாலை, வேளச்சேரி பைபாஸ் சாலை, மர்மலாங் பாலம் – இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி – ஆவடி சாலை ஆகியவை ஸ்மார்ட் சாலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த சாலைகளில், நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தற்போது, இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைப்பணிகளுக்காக  ரூ9 கோடி மதிப்பிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஸ்மார்ட் சாலைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாலைகளில்,  மின்சாரம் மற்றும்  தொலைத்தொடர்பு வயர்கள் பூமிக்கு அடியில் சரியாக பதிக்கப்படுவதையும்,  வடிகால் சரியாக சீரமைக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான வழிகளும் ஏற்படுத்தப்படும்.

இந்த 7 சாலைகளில் நடைபாதை, சைக்கிள்  பாதை, வாகன நிறுத்துமிடம், வாகனத்தின் வேகத்தை மணிக்கு 50 கி.மீ.,ஆக  கட்டுப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதுதவிர, அந்த சாலைகளில்  வைபை போல்ஸ், சிசிடிவி கேமராக்கள், தகவல் கியோஸ்க்குகள் மற்றும்  போக்குவரத்தை சிறப்பாக நிர்வகிக்க தேவையான பிற வசதிகளும் அமைந்திருக்கும்.

மேலும், சென்னை மாநகரில் உள்ள சாலைகளில்  வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 50 கி.மீ.,க்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தகுந்த இடங்களில் சாலை ஹம்ப்ஸ், ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்  மற்றும் ஸ்பீட் டேபிள்கள் போன்ற போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.