சென்னை: சென்னை மாநகராட்சி உட்பட்ட வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக, சென்னை தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான வாகன கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த 16ந்தேதி சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், கூடுதல் கட்டணம் வசூலித்தால், 1913 என்ற தொலைபேசி எண் அல்லது அந்த பகுதி கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்தது. இந்த நிலையில், தற்போது வாகன கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து  உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருநகர மாநகராட்சியின் சார்பில் வாகனங்கள் நிறுத்துவதற்காக 83 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்த இடங்களில் தற்போது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20/- எனவும், இரண்டு சக்கரவாகனங்களுக்கு ரூ,5/. எனவும் கட்டடணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பாளரின் மூலம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை பயன்படுத்தி ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து,  மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்தங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது கட்டணத்தை உயர்த்தி அறிவித்து உள்ளது. சென்னை தி.நகரில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான வாகன கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தி உள்ளது. அதன்படி,  4 சக்கர வாகனம் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.40ஆக இருந்த கட்டணம் ரூ.60 ஆக உயர்த்தப்படுகிறது. இரன்டு சக்கர வாகனம் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.15 ஆக உயர்த்தியிருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.