சென்னை:
சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி கடந்த ஜனவரி 06ம் தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தக காட்சி வளாகத்தில் உள்ள சிற்றரங்கம், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கில் மாலையில் சிறப்பு உரையரங்கங்களும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று மாலையுடன் புத்தக கண்காட்சி நிறைவடைகிறது. புத்தக காட்சி நிறைவு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கலந்துகொண்டு பேசுகிறார். நிகழ்ச்சியில் பதிப்பகத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு துணைபுரிந்தவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன.