சென்னை,

காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தமிழக  இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

கடந்த 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளையை சேர்த்து அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதன் காரணமாக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியமும் இணைந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கேட்டு உச்சநீதி மன்றத்தை நாடினர். உச்சநீதி மன்றமும் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

இதன் காரணமாக தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க வேண்டும் என்று கோரி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தமிழகஅரசு மத்தியஅரசின் ஆலோசனையின்பேரில் அவசர சட்டம் கொண்டு வந்தது.

தமிழகத்தில் தற்போது கொண்டு வரப்ப்ட்டுள்ள விலங்குகள் வதை தடுப்பு சட்ட திருத்தத்தில் , மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்தில் உள்ள 6 ஷரத்துகளுக்கு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர்  தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளையை சேர்த்து அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது. அதுபோல மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப்பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இதன் காரணமாகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.

தற்போது தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள அவசர சட்ட திருத்தத்துக்கு ஏதுவாக, மத்திய அரசும்  2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளையை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெற்று கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு இனிமேல் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.