டெல்லி: மத்தியஅரசின் போட்டித்தேர்வுகளை இனிமேல் தமிழ் உள்ப 13 மொழிகளில் எழுதலாம் என எஸ்எஸ்சி எனப்படும் மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை  இதுவரை ஆங்கிலம் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் தமிழ்நாடு உள்பட பல மாநில மக்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து மாநில மொழிகளிலும் தேர்வுகள் எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுதத் தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப். 23, 24-ஆம் தேதிகளில் தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்..

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான கணினி வழித்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்படஉள்ளது.  எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://ssc.nic.in-இல் தெரிந்துகொள்ளலாம்.