மதுரை: எம்பிசி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நரிக்குறவர் பெயரில் குறவர் என்பதை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை விளாங்குடியைச் சேர்ந்த வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் (எ)முத்துமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், “தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழ்நாட்டில் எஸ்சி-எஸ்டி பட்டியலில் உள்ளனர். மலைப்பகுதியில் இருந்து தற்போது சமதள பரப்பில் வசிக்கின்றனர். இவர்களுக்கு மலைக்குறவன், குறவன் உள்ளிட்ட பெயர்களும் உண்டு. கடந்த 1951-ல் எம்பிசி பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆனால், நரிக்குறவர்கள் அப்படியில்லை. அவர்கள் சமயம், பழக்க வழக்கம், திருமண முறைகள் வேறுபாடு கொண்டது. அவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

நரிக்குறவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அவர்களை நரிக்குறவர் என அழைக்கக்கூடாது. அதற்கு பதில் அவர்களை நரிக்காரர், குருவிக்காரர், வாக்கிரிவாலா, நக்கலே பெயர்களில் அழைக்கலாம். குறவர், குறவன் என்பது எங்களின் தனிப்பட்ட பெயராகும். வேறு பெயர்களில் உள்ளவர்களை நரிக்குறவர்கள் என அழைக்கும் போது எங்களது கல்வி, வேலை வாய்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என இருப்பதில் குறவர் என்பதை நீக்கவும், நரிக்குறவர்களை குருவிக்காரர் என அழைக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன். ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.