சென்னை: மாநகராட்சிக்க உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமங்களை புதுப்பிக்க ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வணிகர்கள், மார்ச் 31க்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வணிகர்கள், 2023-24-ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை மண்டல அலுவலகங்களிலும், முகாம்கள் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் உரிமங்களை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் எனக் கருதி பெருநகர சென்னை மாநகராட்சி விதியின் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான  பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வணிகங்களுக்கு சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன் கீழ் பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கேற்றவாறு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் உரிமங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு, அடுத்து வரும் நிதியாண்டிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

2023-24-ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை மண்டல அலுவலகங்களிலும், முகாம்கள் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வணிகர்களின் நலன் கருதி தொழில்நுட்ப உதவியுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் (www.chennaicorporation.gov.in) என்ற இணையதளம் மூலமாகவும், ‘கியூ ஆர் கோடு’ மூலமாகவும் உரிமங்களை தாமாகவே புதுப்பித்துக்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகர்கள் தொழில் உரிமங்களை மார்ச் 3-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறும், புதிதாகத் தொழில் வணிகம் தொடங்குவோர் உரிமங்களை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், தொழில் உரிமங்களை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் எனக் கருதி பெருநகர சென்னை மாநகராட்சி விதியின் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.