டில்லி:

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாஜக எதிர்த்த அனைத்து திட்டங்களும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கடந்த செப்டம்பர் முதல் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியும், கட் டுரைகளையும் எழுதினார். மேலும், குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக.வுக்கு எதிரான பிரச்சார நடவடி க்கையை அவர் கடைபிடித்தார்.

இந்நிலையில் அவர் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசிடம் நான் எதையும் பேசக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். பிரதமரை சந்திக்க முன் அனுமதி பெற 13 மாதங்களாக காத்திருக்கிறேன். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எதிர்த்த அனைத்து கொள்கைகள், திட்டங்களையும் பாஜக தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.

வாஜ்பாய், அத்வானி காலக்கட்டத்தில் இருந்த பாஜக தற்போது இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் கட்சியின் சிறிய பணியாளர்கள் கூட டில்லி சென்று முன் அனுமதி இல்லாமல் தலைவர் அத்வானியை சந்திக்க முடியும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘தற்போது மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கூட தலைவர் அமித்ஷாவை சந்திக்க முன் அனுமதி கூட பெற முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த 13 மாதங்களாக பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி பெற முடியவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இல்லை’’ என்றார் சின்ஹா.