நியூஸ்பாண்ட்:

தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக ஒரு தகவல் டில்லியில் பரவியது.

ஆனால் பாஜக வட்டாரத்தில் இத்தகவலை மறுக்கிறார்கள்.

“பாஜகவின் திட்டம், டி.டி.வி.தினகரன் உட்பட சசிகலா குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதே. அது நடந்துவிட்டது.

மன்னார்குடி குடும்பத்தில் இருந்து ஆட்சி, கட்சியை ஆட்டிவைத்துக்கொண்டிருந்தவர்கள் சசிகலாவும், தினகரனும்தான்.

சசிகலா சிறை சென்ற பிறகு, தினகரன் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்தார். சசிகலாவின் கணவரான ம.நடராஜனைக்கூட கட்சி, ஆட்சியில் தினகரன் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் கட்சியைவிட்டு ஒதுங்குவதாக தினகரன் தெரிவித்துவிட்டார். ஆக மன்னார்குடி ராஜியம் ஒழிந்தது.

அடுத்ததாக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.

இதில் முக்கியமான விசயம்… மாநிலத்தில் ஆட்சி என்பதைவிட, அதிமுகவின் 50 எம்.பிக்கள்தான் பாஜகவின் இலக்கு.

விரைவில் வர இருக்கும்  குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வேட்பாளருக்கு இந்த ஐம்பது எம்.பிக்களும் வாக்களிக்க வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய அஜண்டா.

அடுத்து வருகிற 2019ம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் இருபதில் பாஜகவும் இருபதில் அதிமுகவும் கூட்டணி வைத்து போட்டியிடும்.

அதுமட்டுமல்ல அடுத்து (2021ம் ஆண்டு) வர இருக்கும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் 50:50 தொகுதி பங்கீடு தொடரும்.

அதிமுகவுக்கு இருக்கும் (இரட்டை இலை) வாக்குவங்கி வெற்றியை தேடித்தரும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

இதன் மூலம் அதிமுகவுக்கு முதல்வர் பதவி.. பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி என்பதே திட்டம். அதாவது 2021ல்.. அ.தி.மு.க. மூலமாக தமிழகத்தில் தாமரை  மலர வைக்க தாமரை திட்டமிடுகிறது. ஆகவே அதிமுக ஆட்சியைக் கலைக்கும் திட்டம்  இல்லை ” என்று ஒரு தகவல் டில்லியில் உலவுகிறது.