மனைவியை விட, கண்ணனுடன் வாழ்ந்த  நாட்கள் அதிகம்…

வேதனைப்படும் இயக்குநர் பாரதிராஜா…

தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு இயக்குநர் பாரதிராஜாவைக் கண் கலங்கச் செய்துள்ளது.

இப்போது தனது சொந்த ஊரான தேனியில் இருக்கும் பாரதிராஜா, வீடியோ மூலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்’’ படப்பிடிப்புக்கு நான் காமிராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனின் கண்களைத்தான் எடுத்துச் செல்வேன். என் மனைவியுடன் கழித்த நாட்களைக் காட்டிலும் கண்ணனுடன் வாழ்ந்த நாட்களே அதிகம். என்னால் கண்ணன் மறைவை ஜீரணிக்க முடியவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ‘’ பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும், கலைக்கண்ணாகவும் விளங்கியவர் கண்ணன், என் முதல் பாடலான பொன்மாலை பொழுதுக்குத் தங்கம் பூசியவர். தேசிய விருது பெற்ற எனது 7 பாடல்களில் 2 பாடல்களுக்கு ஒளிபெயர்த்தவர்’’ என்று தெரிவித்துள்ளார்.