சென்னை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி  இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத அமைப்பினர் நாசவேளைகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று  தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, கோவை, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள் வளாகம், ஓடுதளம், விமான நிலைய வெளி புறங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய நுழைவு வாயிலில் சோதனை சாவடி, வெளி வளாகம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.