சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்று தொடங்குவதையொட்டி, அதிகாலை 5.45 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில்  ஆவணித்திருவிழா இன்று தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில்,  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு பக்தர்கள் வர மாவட்ட நிர்வாகம் இன்றுமுதல் செப்டம்பர் 5ந்தேதி வரை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அதிகாலை 5.45 மணி அளவில் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் கோவில் கொடி மங்கள வாத்திய இசையுடன் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன.

ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.