ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும் அதிகரித்துள்ள நிலையில், தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களின் 3 விசை படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடல் பகுதியில்  மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அவர்களை கைது செய்ய காரணமாக,  எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி, அவர்களை சிறை பிடித்து, இலங்கை சிறையில் அடைப்பதும், பின்னர் இந்திய அரசு தலையிட்டு கேட்டுக்கொண்டதும், அவர்களை விடுதலை செய்வதும், தொடர்கதையாகிறது. ஆனால், சமீப காலமாக இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்வது மட்டுமின்றி, அவர்கள் பிடித்த மீன்களை எடுத்துக்கொள்வதுடன்  வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்தி, அதை திரும்ப வழங்க மறுப்பதும் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,  சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் படகுகளையும் ஏலத்தில் விடும் வேலையையும் இலங்கை கடற்படை செய்து வருகிறது.  இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்களை கைது செய்ததுடன், அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.