ஸ்ரீநகர்,

காஷ்மீரில்  ஆசியாவின் மிகநீளான குகை நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த குகை நெடுஞ்சாலை ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

சுமார் 9.2 கிலோ மீட்டர் தூரமுடைய இந்த நெடுஞ்சாலை,  செனானி – நஷ்ரி இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 300 மீட்டர் தூரத்துக்கு ஒரு இடைவெளி பொதுமக்கள் பாதையை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அதன் கட்டுமானப் பணி நிறைவடைந்ததை அடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக  நேற்று பிரதமர் நரேந்திரமோடி   திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தியுடன் சேர்ந்து அந்த புதிய  சுரங்கப்பாதை வழியாக பிரதமர் காரில் பயணித்தார்.

இந்த சுரங்க நெடுஞ்சாலை சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மூலம் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோரின் பயணம் 2 மணி நேரம் குறையும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு 27 லட்சம் ரூபா யும் ஆண்டுக்கு 99 கோடி ரூபாய் வரையும் எரிபொருள் செலவு மிச்சமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு, உதம்பூர் பகுதியில் இருந்து ரம்பன், பனிஹல், ஸ்ரீநகர் செல்பவர்களுக்கு இந்த சுரங்கப்பாதை வரப்பிரசாதமாக அமையும் என்றும், இந்த சுரங்க நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, சிசிடிவி, தீ தடுப்பு சாதனங்கள் உள்பட உலக தரத்திலான நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மாநில அரசு கூறி உள்ளது.