வாஷிங்டன்

டிரம்ப் தற்போது அதிபராக இல்லாததால் தம்மால் விஞ்ஞானம், கொரோனா குறித்து சுதந்திரமாகப் பேச முடியும் என அமெரிக்க முதன்மை சுகாதார அதிகாரி அந்தோணி ஃபாசி கூறி உள்ளார்.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார்.  அதே வேளையில் அமெரிக்கச் சுகாதாரத்துறை முதன்மை அதிகாரியான அந்தோணி ஃபாசி இது குறித்து பெரிதும் கவலை கொண்டிருந்தார்.  இந்த கொரோனா குறித்து தவறான தகவல்கள் அளித்த போது டிரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.  அப்போதெல்லாம் அவருக்கு உணமையை ஃபாசி எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் ஃபாசியின் எந்த ஒரு கருத்தையும் டிரம்ப் ஏற்றுக் கொள்ளாததோடு அவரது கருத்துக்களை வெளியில் சொல்ல முடியாத  படி பல இடையூறுகளை அளித்து வந்தார்.  அது மட்டுமின்றி அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என ஃபாசி வேண்டுகோள் விடுத்ததற்கு மாறாக டிரம்ப் அனைத்து இடங்களுக்கும் முகக் கவசம் இன்றி சென்றதால் டிரம்ப்புக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இவை அனைத்தும் டிரம்ப் மீது ஃபாசிக்கு ஒரு அதிருப்தியை உண்டாக்கியது.  பலமுறை டிரம்ப் அளித்த தவறான தகவல்களைத் திருத்த முயன்றும் டிரம்ப் அதைக் கண்டுக் கொள்ளவில்லை.  ஒரு கட்டத்தில் தம்மை அடிக்கடி எதிர்த்து தமது கருத்துக்களைத் திருத்தும் பாசியைப் பதவி நீக்கம் செய்யவும் டிரம்ப் ஆலோசித்தாக கூறப்பட்டது.   மேலும் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் எச்சரிக்கையையும்  மீறிக் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது  அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்து ஜோ பைடன் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஃபாசி, “புதிய நிர்வாகம் வெளிப்படையாக, திறந்த மனத்துடனும் மற்றும் நியாயமாகவும் விளங்கும் என நம்புகிறேன்.  இதற்கு முன்பு நான் கொரோனா தொற்று குறித்துப் பல விஞ்ஞான உண்மைகளை வெளிப்படையாக சொல்லிய  போது டிரம்ப் என்னைத் தடுத்தார்.

தற்போது டிரம்ப் அதிபர் பதவியில் இல்லாததால் இனி என்னால் சுதந்திரமாக கொரோனா, அதன் விஞ்ஞான பூர்வ உண்மைகள் ஆகியவை குறித்துப் பேச முடியு7ம்.  இதற்கு முன்பு என்னால் வெளிப்படையாகப் பல கருத்துக்களை சொல்ல முடியாத நிலை இருந்தது.,  இனி அந்த நிலை இருக்காது.  இனி விஞ்ஞான பூர்வ உண்மைகளை என்னால் மக்களுக்குத்  தெரிவிக்க முடியும்” எனக் கூறி உள்ளார்.