சென்னை: வறுமைக்கோட்டுக்கீழே வசிக்Fம்  பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் இயந் திரம் வாங்க விரும்பும் பெண்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துஅனுப்பி வைக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏழைபெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர்.  கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000 கீழ் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூக நலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகளுடன் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.