டில்லி
ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.
மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடும் இழப்பைச் சந்தித்து வந்தது. மத்திய அரசால் ஏர் இந்தியா நிறுவனத்தை இந்த நஷ்டத்துடன் நடத்த முடியவில்லை எனத் தெரிவித்து அதை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அதை மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல் விற்பனை செய்வதில் மும்முரம் காட்டியது. ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் துவக்கத்தில் டாடா குழும நிறுவனமாக இருந்தது.. அதன் பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டது. தற்போது மீண்டும் டாடா குழுமத்திடமே கை மாறி உள்ளது. இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு இருப்பிட வசதி ஏர் இந்தியா நிறுவனத்தால் அளிக்கப்பட்டிருந்தது..
தற்போது நிர்வாகம் மாறி உள்ள நிலையில் ஊழியர்கள் அவரவருக்கு அளிக்கப்பட்டுள்ள இருப்பிடத்தை காலி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இது ஊழியர்களுக்கு கடும் துயரத்தை அளித்துள்ளது. இதையொட்டி ஏர் இந்தியா நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.